ஆளுநர் குறித்த கட்டுரை விவகாரம்: வார இதழ் பணியாளர்கள் முன் ஜாமீன் கோரி மனு

தமிழக ஆளுநர் குறித்து கட்டுரை வெளியிட்ட விவகாரத்தில், நக்கீரன் வார இதழின் செய்தி ஆசிரியர் உள்ளிட்ட 35 பேர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்

தமிழக ஆளுநர் குறித்து கட்டுரை வெளியிட்ட விவகாரத்தில், நக்கீரன் வார இதழின் செய்தி ஆசிரியர் உள்ளிட்ட 35 பேர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுவுக்கு போலீஸார் தரப்பில் அளிக்கப்பட்ட பதிலில், மனுதாரர்களை கைது செய்யமாட்டோம் என உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
 கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய குற்றச்சாட்டில் உதவிப் பேராசிரியை நிர்மலாதேவியை போலீஸார் கைது செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக நக்கீரன் இதழில் வெளியான கட்டுரையில் தமிழக ஆளுநர் குறித்து சில தகவல்கள் இடம்பெற்றிருந்தன.
 இதையடுத்து, ஆளுநரை பணி செய்யவிடாமல் தடுத்ததாகக் கூறி, நக்கீரன் ஆசிரியர் கோபால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட் நக்கீரன் கோபாலை விடுவித்து உத்தரவிட்டார்.
 இந்த நிலையில் நக்கீரன் இதழில் பணியாற்றும் செய்தி ஆசிரியர் உள்ளிட்ட 35 பணியாளர்கள் தங்களுக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
 இந்த மனு நீதிபதி எம்.தண்டபாணி முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனு தொடர்பாக பதிலளிக்க உத்தரவிட்டார்.
 அப்போது மனுதாரர்களை கைது செய்யமாட்டோம் என போலீஸார் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கின் விசாரணையை வரும் 25 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com