சென்னை அமைந்தகரையில் இரண்டாயிரம் ரூபாய் கள்ளநோட்டு வைத்திருந்ததாக, இரு பெண்கள் கைது செய்யப்பட்டனர். அமைந்தகரை ரயில்வே காலனி மூன்றாவது தெருவைச் சேர்ந்த சா.கன்னிமரியாள் (40). மருந்துக் கடை நடத்தி வருகிறார். இக்கடைக்கு வெள்ளிக்கிழமை வந்த ஒரு பெண், சில மருந்துகளை வாங்கிக்கொண்டு இரண்டாயிரம் ரூபாய் நோட்டைக் கொடுத்து சில்லறை வாங்கிக் கொண்டார்.
அப்பெண் கொடுத்தது கள்ளநோட்டு என்று தெரிந்ததும் கன்னிமரியாள் அந்தப் பெண்ணைத் தேடினார். ஒரு மளிகைக் கடையில் பொருள்கள் வாங்கிக் கொண்டிருந்த அந்த பெண்ணை, கன்னிமரியாள் பிடித்து அமைந்தகரை போலீஸாரிடம் ஒப்படைத்தார். போலீஸார் சோதனை செய்ததில் அந்தப் பெண்ணிடமிருந்து 17 இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் இருப்பது தெரியவந்தது.
போலீஸாரின் விசாரணையில் அவர், சைதாப்பேட்டையைச் சேர்ந்த ந.வனிதா (30) என்பதும், அண்ணா நகரில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருவதும் தெரியவந்தது. வனிதாவுக்கு, அவரது தோழி கொளத்தூரைச் சேர்ந்த சத்தியலட்சுமியிடம் (34) இருந்து கள்ளநோட்டுகள் கிடைத்திருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீஸார், சத்தியலட்சுமி வீட்டில் அதிரடியாக சோதனை செய்தனர். இச்சோதனையில் அங்கிருந்து கள்ளநோட்டுத் தயாரிக்க பயன்படுத்திய ஒரு ஜெராக்ஸ் இயந்திரம், இரண்டாயிரம் ரூபாய், ஐநூறு ரூபாய் கள்ளநோட்டுகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர். போலீஸார் வனிதாவையும், சத்தியலட்சுமியையும் கைது செய்தனர்.