சிறுமியைக் கற்பழித்ததாக இளைஞர் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் பொய் வழக்குப் பதிவு செய்த பெண் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் ஆகியோருக்கு தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்து மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து வேலூர் மாவட்டம், அரக்கோணம் கீழ்குப்பம் பகுதியைச் சேர்ந்த பிரபா என்பவர் அளித்த மனு: தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் எனது மகன் சரண்ராஜ் கடந்த 2013-டிசம்பர் 10-ஆம் தேதி வேலைக்குச் செல்வதற்காக அரக்கோணம் ஜோதி நகர் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த அரக்கோணம் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் சரஸ்வதி, உதவி ஆய்வாளர் பிரியதர்ஷினி ஆகியோர் முன்விரோதம் காரணமாக சரண்ராஜை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, அவரைக் கடுமையாகத் தாக்கியதுடன், சிறுமியைக் கற்பழித்ததாக பொய் வழக்குப் பதிவு செய்தனர்.
எனவே, பொய் வழக்குப் பதிவு செய்ததுடன், அடித்து துன்புறுத்தி மனித உரிமை மீறலில் ஈடுபட்ட காவல் அதிகாரிகள் சரஸ்வதி, பிரியதர்ஷிணிஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ரூ. 2 லட்சம் அபராதம்: இந்த மனு மீது மாநில மனித உரிமை ஆணைய நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரணை நடத்தினார். அதில், காவல் அதிகாரிகள் இருவரும் பொய் வழக்குப் பதிவு செய்து சரண்ராஜை சிறையில் அடைத்ததுடன், அவரைத் தாக்கி மனித உரிமை மீறலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. எனவே, காவல் ஆய்வாளர் சரஸ்வதி, உதவி ஆய்வாளர் பிரியதர்ஷிணி ஆகியோருக்கு தலா ரூ. 1 அபராதம் விதிக்கப்படுகிறது. இந்தத் தொகையை இருவரின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்வதுடன், இருவர் மீது துறைரீதியான, குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி டி.ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார்.