சென்னை கொரட்டூர் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகளை அகற்றும் பணிஇரண்டாம் நாளாக சனிக்கிழமையும் தொடர்ந்தது.
கொரட்டூர் ஏரியைச் சுற்றி மூகாம்பிகை நகர், முத்தமிழ் நகர், கங்கை நகர், எஸ்.எஸ்.நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஏரியை ஆக்கிரமித்து 598 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்பகுதி மக்கள் எதிர்ப்பையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் முதல் நாளான வெள்ளிக்கிழமை 215 வீடுகள் பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் இடித்து அகற்றப்பட்டன.
தொடரும் அகற்றும் பணி: முத்தமிழ் நகரில் இரண்டாம் நாளாக ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணி சனிக்கிழமையும் தொடர்ந்தது. காவல் இணை ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையில் அப்பகுதியில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர். இதையடுத்து 200-க்கும் மேற்பட்ட வீடுகள் இடித்து அகற்றப்பட்டன. முன்னதாக வீடுகளில் இருந்த பொருள்களை குடியிருப்புவாசிகள் அப்புறப்படுத்தினர்.
இதுகுறித்து வருவாய்த் துறை அதிகாரிகள் கூறுகையில், "முத்தமிழ் நகரில் கொரட்டூர் ஏரியை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள வீடுகளை அகற்றும் பணியை விரைவில் முடிக்கத் திட்டமிட்டுள்ளோம். முதற்கட்டமாக அவர்களுக்கு பெரும்பாக்கத்தில் உள்ள குடிசைமாற்று வாரியக் குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதன் முதல்கட்டமாக 90 பேருக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ளவர்கள் கணக்கிடப்பட்டு அவர்களுக்கான வீடுகள் விரைவில் ஒதுக்கப்படும் என்றனர்.