சென்னை மாநகரம் முழுவதும் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகரம் முழுவதும் தற்போது சொத்து வரியை மறு சீராய்வு செய்து அதனை உயர்த்தி மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
ஏற்கெனவே மாநகராட்சியின் ஆயுள்காலம் முடிந்து உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாததால் அதிகாரிகளின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தச் சூழலில் மக்கள் மீது பலமடங்கு கூடுதலாக வீட்டு வரியை உயர்த்தியிருப்பது மிகுந்த கண்டனத்துக்குரியது. அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உருவாக்க நிதி தேவைப்படும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், எந்தவிதமான தெளிவான நடைமுறையும் அறிவிக்கப்படாமல்
சொத்து வரியை ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக உயர்த்தும் அணுகுமுறையை கையாள்வது பல்வேறு குழப்பங்களுக்கு வழிவகுக்கிறது.
சென்னை மாநகராட்சியில் சொத்து வரி மறுசீராய்வு குறித்து தெளிவான நடைமுறைகளை அறிவிக்க வேண்டும். அந்த நடைமுறைகள் வெளிப்படையானதாகவும் அனைத்து பகுதிகளுக்கும் சீரானதாகவும் இருக்க வேண்டும்.
நாடார் சமுதாயம்: சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் நாடார் சமுதாயம் குறித்து தவறான கருத்துகள் உள்ள பாடத்தை மத்திய அரசு உடனடியாக நீக்க வேண்டும் என்றும் அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.