சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு புதிய வரவாக பஞ்சவர்ணக் கிளிகள் உள்பட 7 கிளி இனங்கள் வரவழைக்கப்பட்டு அவை பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
சென்னையை அடுத்த வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்காவில் யானைகள், புலிகள், ஊர்வன, பறவைகள் என 2,375 வன விலங்குகள் பராமரிக்கப்படுகின்றன.
இவற்றில், குறிப்பாக 61 உள்ளூர் பறவை இனங்கள், 28 வெளிநாட்டு பறவை இனங்கள் என மொத்தம் 1,604 பறவைகள் பராமரிக்கப்படுகின்றன.
புதிய வரவு: இதுகுறித்து வண்டலூர் பூங்கா நிர்வாகிகள் கூறுகையில், சென்னை, சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள வளர்ப்பு பிராணிகள் விற்பனைக் கடைகளில் வனத் துறையினர் அண்மையில் சோதனை நடத்தினர்.
அதில், மத்திய, தென் அமெரிக்க நாடுகளில் காணப்படும் ஸ்கார்லெட் பஞ்சவர்ணக் கிளி, கேட்டிலைனா பஞ்சவர்ணக் கிளி, ஹர்லிகுயின் பஞ்சவர்ணக் கிளி, ஒரு ஜோடி சீவர் பஞ்சவர்ணக் கிளிகள், டஸ்கி பாய்னஸ் கிளி, ஒரு ஜோடி ரூபெல்ஸ் கிளிகள், ஒரு ஜோடி அமேசான் ஆரஞ்சு இறகு கிளிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இந்தக் கிளிகள் கால்நடை மருத்துவரின் கண்காணிப்பில் பராமரிக்கப்பட்டு வந்தன.
இவற்றின் உடல்நிலை நன்றாக உள்ளதால், இவை வண்டலூர் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டு, பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இவற்றின் நிறமும், தனித்துவமான குரலும் பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் உள்ளன என்றனர்.