எம்.ஜி.ஆர். நகரில் மீன் வியாபாரி கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது உறவினர் கைது செய்யப்பட்டார்.
எம்.ஜி.ஆர்.நகர் சூளைப்பள்ளம் நேரு தெருவைச் சேர்ந்தவர் நீலியப்பன் (55). மீன் வியாபாரியான இவர், கடந்த 6 -ஆம் தேதி நெசப்பாக்கம் எம்.ஜி.ஆர். சிலை அருகே சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு மதுபோதையில் நின்ற அவரது உறவினர்கள் தங்கராஜ் (40), செல்வம் ஆகியோர் நீலியப்பனை மறித்து பணம் கேட்டதாக கூறப்படுகிறது. இதில் நீலியப்பன் தன்னிடம் பணம் இல்லை எனக் கூறி இருக்கிறார். அப்போது தங்கராஜும், செல்வமும் நீலியப்பனிடம் தகராறு செய்தனராம். தகராறு முற்றவே அவர்கள் இருவரும் நீலியப்பனை தாக்கி, சைக்கிளில் இருந்து கீழே தள்ளினராம். இதில் பலத்த காயமடைந்த அவர், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நீலியப்பன் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை இறந்தார்.
இதுதொடர்பாக எம்.ஜி.ஆர். நகர் போலீஸார் வழக்குப் பதிந்து தங்கராஜை உடனடியாக கைது செய்தனர். தலைமறைவான செல்வத்தை தேடி வருகின்றனர்.