சென்னை அண்ணா நகரில் பிரபல நகைக்கடையில் 60 பவுன் தங்கநகைத் திருடிய வழக்கில், ஊழியர் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
அண்ணாநகர் சாந்தி காலனி 4 -ஆவது அவென்யூவில் பிரபலமான நகைக் கடை உள்ளது. இந்தக் கடையில் கடந்த 7 -ஆம் தேதி தணிக்கை நடைபெற்றது. அப்போது நகைக்கடையில் இருந்த 60 பவுன் தங்கநகைத் திருடப்பட்டிருப்பதும், கடையில் ஊழியராக வேலை செய்த புதுச்சேரி அரியாங்குப்பம் நூர் தெருவைச் சேர்ந்த முகம்மது ரபீக் மாயமாகியிருப்பதும் தெரிய வந்தது.
இதுகுறித்து அந்த நகைக் கடையின் மேலாளர் சீனிவாசன், அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனர். தலைமறைவாக இருந்த முகம்மது ரபீக்கை போலீஸார் தேடி வந்தனர்.இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், குடும்ப வறுமையின் காரணமாக நகையை திருடியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். இதுதொடர்பாக போலீஸார், மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.