சுற்றுச்சுழல் பாதுகாப்பை வலியுறுத்தி சென்னை பெசன்ட் நகரில் உள்ள எலியட்ஸ் கடற்கரையை இந்திய கடலோரக் காவல் படையினர் சனிக்கிழமை சுத்தம் செய்தனர்.இப் பணி வரும் 18-ஆம் தேதி வரை நடக்கிறது.
ஐ.நா.வின் சுற்றுப்புறத்தூய்மை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், கடந்த 1986-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 3-ஆவது வாரம் சர்வதேச கடற்கரை சுத்தம் செய்யும் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. கடல் மற்றும் கடல்சார்ந்த பகுதிகள், உயிரினங்களை பாதுகாக்கும் வகையில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
அதன்படி இந்திய கடலோரக் காவல்படை சார்பில் சென்னை பெசன்ட் நகரில் உள்ள எலியட்ஸ் கடற்கரை சனிக்கிழமை சுத்தம் செய்யப்பட்டது. வரும் 18-ஆம் தேதி வரை ஒவ்வொரு நாளும் காலை 6.30 முதல் 9 மணி வரை கடலோரக் காவல்படையைச் சேர்ந்தவர்கள் இதனை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபடுகின்றனர்.
இப்பணியினை சனிக்கிழமை, கிழக்குப் பிராந்திய கடலோரக் காவல்படை ஐ.ஜி. எஸ்.பரமேஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இப்பணியில் கடலோர காவல்படை, தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம் (என்ஐஓடி), மாநில மீன்வளத் துறை, துறைமுகம், காவல்துறை, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், என்சிசி மற்றும் என்எஸ்எஸ் மாணவர்கள் உள்பட 1,280 பேர் கலந்து கொண்டனர். அப்போது பிளாஸ்டிக் உள்பட சுமார் 4,300 கிலோ எடையுள்ள எளிதில் மக்காத குப்பைகள் சேகரிக்கப்பட்டன.