பெருமை மிகுந்த இந்திய ராணுவத்தில் இணைந்து பணியாற்றுவதில் இளைஞர்களுக்கு எந்தவிதத் தயக்கமும் இருக்கக் கூடாது என சென்னை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தின் லெப்டினன்ட் ஜெனரல் சஞ்சீவ் கனல் வலியுறுத்தினார்.
இந்திய ராணுவ வீரர்களின் தியாகத்தைப் போற்றவும், அவர்களது தீரமிகு செயல்களைப் பரப்பும் வகையிலும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி "மேன்மைமிகு தியாகம்' என்ற தலைப்பில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளில் நடைபெற்ற இந்தப் போட்டிக்கு "எஸ்' ஃபவுண்டேஷன் சார்பில் அதன் நிறுவன அறங்காவலர்கள் உயர்நீதிமன்ற வழக்குரைஞர் கே.சுமதி, ஜி.எஸ்.சிம்மாஞ்சனா, மூத்த வழக்குரைஞர் ஆர்.சங்கரநாராயணன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
போட்டிக்கு செம்மொழித் தமிழாய்வு நிறுவனத் துணைத் தலைவர் பேராசிரியர் தெ.ஞானசுந்தரம், பத்திரிகையாளர் மாலன், மருத்துவர் சுதா சேஷய்யன், மேஜர் வி.வி.நாராயணன், சார்ட்டட் அக்கவுண்டன்ட் டி.என்.மனோகரன் உள்பட 7 பேர் நடுவர்களாக செயல்பட்டனர்.
கேப்டன் விக்ரம் பத்ரா, மேஜர் சரவணன், தளபதி சௌரவ் காலியா உள்ளிட்ட தேசத்துக்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்கள், இந்திய ராணுவத்தின் பெருமைகள் குறித்து இறுதிச் சுற்றில் பங்கேற்ற 11 மாணவ, மாணவிகள் பேசினர்.
ரூ.10,000 பரிசு: இதையடுத்து தமிழில் சிறப்பாகப் பேசிய சென்னை குருநானக் கல்லூரி மாணவர் ஏ.ஞானவேல், கோயம்புத்தூர் கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர் வி.ஹரீஷ், "பட்ங் நன்ல்ழ்ங்ம்ங் நஹஸ்ரீழ்ண்ச்ண்ஸ்ரீங்' என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் சிறப்பாகப் பேசிய சென்னை ஜஸ்டிஸ் பஷீர் அகமது சயீத் கல்லூரி மாணவி ஷாஃபா தபஸýம், சென்னை கே.சி.ஜி. தொழில்நுட்பக் கல்லூரி மாணவர் சத்யம் திவாரி ஆகிய நான்கு பேருக்கும் தலா ரூ.10,000, பாராட்டுச் சான்றிதழ், ராணுவ வீரர் சிலை ஆகியவற்றை லெப்டினன்ட் ஜெனரல் சஞ்சீவ் கனல் வழங்கினார்.
ராணுவ வீரர் குடும்பத்துக்கு உதவி: முன்னதாக, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் உயிரிழந்த சிவகங்கை மாவட்டம் இளையான்குடியைச் சேர்ந்த ராணுவ வீரர் இளையராஜாவை கௌரவிக்கும் வகையில் அவரது மனைவி செல்வி இளையராஜாவுக்கு "எஸ்' பவுண்டேஷன் சார்பில் ரூ.1 லட்சம் வழங்கப்பட்டது.