பல ஆண்டுகளாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும் முறையான பரிசோதனைகள், உணவு முறையைக் கடைப்பிடித்து 90 வயதுக்கும் மேல் ஆரோக்கியமாக வாழ்ந்து வருபவர்கள், விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
தங்களுக்கு சர்க்கரை நோய் இருந்தாலும், ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்ந்து வரும் 90 வயதுக்கு மேற்பட்டவர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கான விருது வழங்கும் விழா, சென்னை டாக்டர் மோகன்ஸ் சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், உயர்கல்விக்கான தமிழ்நாடு மாநிலக் கவுன்சில் முன்னாள் துணைத் தலைவர் டாக்டர் எஸ்.வி.சிட்டிபாபு, தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலர் பி.சபாநாயகம் உள்பட 20 -க்கும் மேற்பட்டோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
விழாவில் மையத்தின் தலைவர் டாக்டர் வி.மோகன் பேசியதாவது:-
விருது பெற்றவர்களில் சிலருக்கு 55 ஆண்டுகளுக்கும் மேல் சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளது. எனினும் 3 அல்லது 4 மாதங்களுக்கு ஒருமுறை பரிசோதனை, ஆரோக்கியமான உணவுமுறை, உடற்பயிற்சி ஆகியவற்றை கடைப்பிடிப்பதன் காரணமாக இவர்கள் நல்ல உடல்நலத்துடன் உள்ளனர். இது சர்க்கரை நோய் பாதிப்புள்ள அனைவருக்கும் புதிய உத்வேகத்தை அளிப்பதாக உள்ளது.