உத்தரமேரூர் அருகேயுள்ள மூலிகைப் பண்ணையை கல்லூரி மாணவிகள் பார்வையிட்டனர்.
உத்தரமேரூரை அடுத்த கைத்தண்டலம் கிராமத்தில் எழில்சோலை மூலிகைப் பண்ணை உள்ளது. இங்கு, ஏராளமான அரிய வகை மூலிகை மரங்களும், செடிகளும் உள்ளன.
சென்னை தேனாம்பேட்டை ஜெ.பி.ஏ.எஸ். மகளிர் கல்லூரி மாணவிகள் சனிக்கிழமை இந்தப் பண்ணையை பார்வையிட வந்தனர். இங்குள்ள ருத்ராட்சம், ஆப்பிள், ஸ்டிராபெர்ரி உள்ளிட்ட செடிகளைக் கண்டு வியப்பில் ஆழ்ந்தனர்.
அப்போது அவற்றின் பயன்கள், மருத்துவ குணங்கள் குறித்து மூலிகைப் பண்ணை நிறுவனர் மாசிலாமணி, மாணவிகளுக்கு விளக்கிக் கூறினார்.
பண்ணையின் ஒரு பகுதியிலுள்ள விளை நிலத்தில், விவசாயிகள் இயற்கை விவசாயம் செய்திருந்தனர்.
இதைக் கண்ட மாணவிகள், வயலில் இறங்கி கத்திரி செடிகளை நடவுசெய்தனர்.
இதுகுறித்து மாசிலாமணி கூறுகையில், இயற்கை விவசாயம் செய்தால் தான் மனிதர்கள் நோய், நொடி இன்றி வாழ முடியும்.
எனவே, இயற்கை விவசாயம் குறித்து தற்போதைய தலைமுறையினர் அறிந்து கொண்டு இயற்கையோடு ஒன்றி வாழ பழகிட வேண்டும் என்றார். பின்னர், மாணவிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.