மாமல்லபுரம் அரிமா சங்கம், மாமல்லபுரம் காவல் துறை மற்றும் மன்சூரியா குங்ஃபூ அமைப்பு ஆகியனஇணைந்து பொதுமக்கள் மற்றும் சிறுவர்களுக்கான தற்காப்புக் கலை விழிப்புணர்வு நிகழ்ச்சியை புதன்கிழமை நடத்தின.
மாமல்லபுரம் கடற்கரை பகுதி மற்றும் வெண்ணெய் உருண்டை பாறை பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியை, மாமல்லபுரம் உள்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் சி.எட்வர்ட் தொடங்கி வைத்துப் பேசியதாவது: தற்காப்புக் கலை என்பது உடற்பயிற்சி மட்டுமல்லாமல், ஆபத்து நேரிடும்போது தங்களை பாதுகாத்துக் கொள்ளும் மிகச் சிறந்த கலையாகும்.
இக்கலையை சிறுவர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் கற்றுக் கொள்வதுமட்டுமல்லாமல் பெண்களும் கற்றுக் கொள்வது அவசியம்.
அதுவும் மாமல்லபுரம் சுற்றுலாத் தலத்துக்கு வருவோர் தங்களை காத்துக் கொள்ள பயனுள்ளதாக இருக்கும் என்றார்.
மாமல்லபுரம் அரிமா சங்கத் தலைவர் எஸ்.சிவகுமார், செயலாளர் ஏ.விஜயசேகர், பொருளாளர் ஆர்.புருஷோத்தமன், ஏ.ஹெச்.அப்துல் ஹமீது உள்ளிட்டோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்தனர். மாமல்லபுரம் மன்சூரியா தற்காப்பு கலை பயிற்சி நிறுவனர் பஞ்சாட்சரம் மற்றும் குழுவினர் தற்காப்பு கலை விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாணவர்களை வைத்து நிகழ்த்தினர். இதில் பொதுமக்கள், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கலந்து கொண்டனர்.