காஞ்சிபுரத்தில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நீதிமன்ற உத்தரவின்படி உரிய இழப்பீட்டுத் தொகை வழங்காததால் இரு அரசு பேருந்துகள் வெள்ளிக்கிழமை நீதிமன்ற ஊழியர்களால் ஜப்தி செய்யப்பட்டது.
கடந்த 2014-ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தைச் சேர்ந்த முருகப்பிள்ளை என்பவர் சாலையை கடந்தபோது அரசுப் பேருந்து மோதி உயிரிழந்தார். இதையடுத்து அவரது குடும்பத்துக்கு ரூ. 12 லட்சம் இழப்பீட்டுத் தொகையாகவும், அதை உரிய காலத்தில் வழங்காவிட்டால் அதற்குண்டான வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என மாவட்ட அமர்வு நீதிமன்றம் ஜனவரி மாதம் தீர்ப்பளித்தது.
அதே போல் 2010-ஆம் ஆண்டு காஞ்சிபுரம் சந்தவேலூர் அருகே அரசு காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர் பேருந்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். இவருக்கும் ரூ. 12 லட்சம் இழப்பீட்டுத் தொகை மற்றும் கால தாமத்துக்கேற்ப வட்டித் தொகையுடன் சேர்த்து வழங்க வேண்டும் என நீதிபதி கருணைநிதி உத்தரவிட்டார். இரு வழக்குகளிலும் வழக்குரைஞர் பத்மநாபன் ஆஜரானார்.
இந்த நிலையில் உரிய இழப்பீட்டுத் தொகை இரு குடும்பத்தினருக்கும் வழங்காததால் வெள்ளிக்கிழமை பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன், நீதிமன்ற ஊழியர்கள் வந்து, காஞ்சிபுரத்தில் இருந்து தாம்பரம் நோக்கிச் சென்ற இரு அரசுப் பேருந்துகளை ஜப்தி செய்து நோட்டீஸ் ஒட்டினர். இதைத் தொடர்ந்து அதில் இருந்த பயணிகள் மாற்றுப் பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.