வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னையை அடுத்த தாம்பரம், பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து கட்சிகளின் சார்பில் செவ்வாய்கிழமை முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.
பல்லாவரத்தில் அனைத்து கடைகளும் போராட்டத்திற்கு ஆதரவாக அடைக்கப்பட்டு இருந்தன. ஜிஎஸ்டி சாலையில் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டதைக் கண்டித்து பல்லாவரம் சட்டப்பேரவை உறுப்பினர் இ.கருணாநிதி தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
தாம்பரம் சட்டப்பேரவை எஸ்.ஆர்.ராஜா தலைமையில் 600-க்கும் மேற்பட்டோர் தாம்பரம் பஸ் நிலையம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து அனைவரும் கைது செய்யப்பட்டு மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் சிவராமன், நகர காங்கிரஸ் கட்சித் தலைவர் ரூபி மனோகரன், இந்திய கம்யூனிஸ்டு,,மனித நேயமக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் நிர்வாகிகள் போராட்டத்தில் பங்கேற்றனர்.