மதுராந்தகத்தை அடுத்த கருங்குழி மேலவலம்பேட்டையில் அரசு மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு மெக்கானிக் ஒருவர் இலவசமாக பஞ்சர் ஒட்டி தருகிறார்.
மதுராந்தகத்தை அடுத்த அண்டவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன் (42). இவர் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள, கருங்குழி மேலவலம்பேட்டை பகுதியில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை, பழுது பார்க்கும் பட்டறையை வைத்துள்ளார். சாலை விபத்துகளில் காயமடைந்தவர்கள், நோய்களால் பாதிக்கப்பட்டோர்களை அவசர சிகிச்சைக்காக அழைத்துச் செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் திடீரென பஞ்சர் ஆனால், நோயாளிகளின் நிலை கேள்விக்குறியாகிறது.
இதனை உணர்ந்த சரவணன் அரசு, தனியாருக்குச் சொந்தமான ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு பஞ்சர் ஒட்டுதல், காற்றுப் பிடித்தல், டயர் மாற்றி கொடுத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை கடந்த 8 ஆண்டுகளாக இலவசமாக செய்து வருகிறார்.
இவரது சேவை மனப்பான்மையை பாராட்டி, கருங்குழி வர்த்தகர் சங்கம் சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. இவர் சமூக சேவை மட்டுமின்றி, ஆன்மிகத்திலும் ஈடுபாடு உள்ளவராக உள்ளார்.
இப்பகுதியில் உள்ள கோயில்களுக்கு விளக்கேற்றும் எண்ணெய், அபிஷேகப் பொருள்களை இலவசமாக வாங்கித் தருகிறார். மேலும், அண்டவாக்கத்தில் சிவாலயம் ஒன்றும் கட்டி வருகிறார்.