காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே தேங்கியுள்ள கழிவு நீரால் பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
காஞ்சிபுரம் பேருந்து நிலையம் காமராஜர் சாலையில் உள்ளது. இப்பகுதியில் பெருநகராட்சியால் பராமரிக்கப்படும் கழிவு நீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் பல நாள்களாக கழிவு நீர் சாலையில் தேங்கியுள்ளது.
கடந்த சில தினங்களாக பெய்த கன மழையால் பேருந்து நிலையத்தில் இருந்து வெளியே வரும் வழியில் கழிவு நீரும், மழை நீரும் குளம் போல் தேங்கியுள்ளது.
இதனால் பேருந்து நிலையத்துக்கு நடந்து செல்ல முடியாமல் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். மேலும் அவ்வழியாக வாகனங்கள் செல்லும்போது, நடந்து செல்வோர் மீது சேற்றை வாரி இறைப்பதால் அவர்கள் அவதிக்குள்ளாகின்றனர். கழிவு நீரால் ஏற்படும் துர்நாற்றம் காரணமாக வியாபாரிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
எனவே பெரு நகராட்சி நிர்வாகம் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே தேங்கியிருக்கும் கழிவு நீரை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.