காஞ்சிபுரத்தை அடுத்த கோவிந்தவாடி அகரத்தில் தீக்குளித்த பள்ளி மாணவர் புதன்கிழமை உயிரிழந்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம், கோவிந்தவாடி அகரத்தைச் சேர்ந்தவர் கன்னியப்பன். இவரது மகன் காமேஷ் (13). அருகில் உள்ள தனியார் பள்ளியில் 8- ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், பள்ளியில் கொடுக்கப்பட்ட வீட்டுப் பாடங்களை செய்யாததால், காமேஷின் பெற்றோரை அழைத்து பள்ளி ஆசிரியர் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை பள்ளிக்குச் செல்வதற்கு முன்பு, மாடிக்குச் சென்று அடையாள அட்டையை எடுத்து வருவதாகக் கூறிச் சென்ற காமேஷ், அங்கு தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளித்தார். இதையடுத்து, அவர் மீட்கப்பட்டு, காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், மேல்சிகிச்சைக்காக சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு காமேஷ் புதன்கிழமை உயிரிழந்தார்.
இதுகுறித்து பாலுசெட்டி காவல் ஆய்வாளர் பிரபாகர், தனிப்பிரிவு துணை ஆய்வாளர் சிவக்குமார் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.