அளவுக்கு அதிகமான சுமை ஏற்றி வந்த 16 லாரிகளுக்கு ஸ்ரீபெரும்புதூர் போலீஸார் ரூ. 1.25 லட்சம் அபராதம் விதித்தனர்.
போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்களை இயக்குதல், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுதல், செல்லிடப்பேசியில் பேசியபடி வாகனங்களை இயக்குதல், சரக்கு வாகனங்களில் அதிக சுமை ஏற்றுதல், அதிக உயரத்திற்கு ஏற்றுதல் உள்ளிட்டவைகளை வாகன ஓட்டுநர்கள் மேற்கொண்டால் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து அபராதம் விதிக்கவும், ஓட்டுநர்கள் உரிமங்களை ரத்து செய்யவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து டி.எஸ்.பி. சிலம்பரசன் அறிவுறுத்தலின் பேரில் ஸ்ரீபெரும்புதூர் காவல் ஆய்வாளர் நடராஜ் தலைமையில் போலீஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் அளவுக்கு அதிகமாக சுமை ஏற்றி வந்த 16 லாரிகள் மீது வழக்குப் பதிவு செய்து ரூ. 1.25 லட்சம் அபராதமாக வசூலித்தனர். மேலும் சரக்கு லாரிகளை ஓட்டி வந்த 16 ஓட்டுநர்களின் உரிமங்களை பறிமுதல் செய்து அவற்றை ரத்து செய்ய போக்குவரத்துத் துறைக்கு பரிந்துரை செய்துள்ளனர்.