தண்டலம் பகுதியில் வசித்து வந்த அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த சிறுமி மாயமானதாக ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ்
குமார்(32). இவர் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த ராகிளிஜன்மத்தை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த தண்டலத்தில் வசிக்கின்றனர். இந் நிலையில் ராகிளிஜன்மத்தின் தாயார் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு அஸ்ஸாமில் இருந்து தண்டலம் வந்துள்ளார். அப்போது வயது முதிர்வு காரணமாக தன்னால் கவனித்துக் கொள்ள முடியாதநிலையில் தான் வளர்த்து வந்த தாய்-தந்தை இல்லாத சிறுமி லிப்பிக்காவை (11) தனது மகள் ராகிளிஜன்மத்தின் வீட்டில் விட்டுச் சென்றுள்ளார்.
இதையடுத்து லிப்பிக்கா தண்டலத்தில் வசித்து வந்தார். இந் நிலையில் லிப்பிக்கா கடந்த சனிக்கிழமை மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து தினேஷ்குமார் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து மாயமான லிப்பிக்காவை தேடி வருகின்றனர்.