மாமல்லபுரம் அருகே எச்சூர் கிராமத்தில் அமைந்துள்ள, ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய புராதன சிறப்புடைய காசி விஸ்வநாதர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக் கோயிலில் திருப்பணிகள் வேலைகள் நிறைவடைந்தன. இதைத் தொடர்ந்து விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமம், கோ பூஜை, யாகசாலை பூஜைகள், நவக்கிரக ஹோமம், சாந்தி ஹோமம், கலசபூஜை, பூர்ணாஹுதி, மகா தீபாராதனை நடத்தப்பட்டு வேதமந்திரங்கள் முழங்க கலசப் புறப்பாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
இதனையடுத்து கோயில் கோபுர விமானங்களுக்கு மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. தமிழ்வேதம் இதழ் ஆசிரியர்
ஆ. பக்தவச்சலம் தலைமையில் சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.
பின்னர் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் உற்சவமூர்த்திகள் திருவீதி உலா நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை திருப்பணிக் குழுவைச் சேர்ந்த ஆர்.புருஷோத்தமன், ஏ.மணிகண்டன், இ.டி.குமார், டி.சிவலிங்கம், பி.லட்சுமணன் மற்றும் எச்சூர் கிராம மக்கள் செய்திருந்தனர்.