செய்யூர் வட்டம், கடப்பாக்கம் துர்கையம்மன் கோயிலில் 21ஆம் ஆண்டு ஆடித்திருவிழா செவ்வாய்க்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
இதையொட்டி அதிகாலை விநாயகர், கருவறை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. மூலவருக்கு சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
கடப்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமங்கலி பெண்கள் பால்குடம் எடுத்தும், அலகு குத்தி வேனை இழுத்து ஊர்வலமாக வந்தனர். இதனை துர்கையம்மன் திருக்கோயில் பீடாதிபதி பாலசுப்பிரமணிய சுவாமி தொடங்கி வைத்தார்.
முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலம் கோயிலை வந்தடைந்தது. அங்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இரவு 8 மணிக்கு சிறப்பு அலங்காரத்துடன், மேளதாளம் முழங்க முக்கிய வீதிகளின் வழியாக அம்மன் பவனி வந்தார். அன்னதானம், இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் கடப்பாக்கம் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை ஆர்.ராதாகிருஷ்ணன், பாலசுப்பிரமணிய சுவாமி தலைமையில் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.