காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்திய குழந்தைகள் திரைப்படம் சங்கம் சார்பில் திரையரங்குகளில் குழந்தைகள் திரைப்பட விழா நடைபெறவுள்ளது.
இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் ஆட்சியர் பேசியதாவது: இந்திய அரசின் தகவல் மற்றும் ஒளிப்பரப்புத் துறை சார்பில், இந்திய குழந்தைகள் திரைப்படச் சங்கத்தின் மூலம் குழந்தைகள் திரைப்பட விழா காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஜூலை மாதத்தில் நடைபெறவுள்ளது. பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் திரையரங்குகளில் இலவசமாக இத்திரைப்படங்கள் திரையிட்டு காண்பிக்கப்படும். திரையரங்குகளில் காலை 9 மணி முதல் 11 மணி வரை சிறப்பு காட்சியாக இந்திய குழந்தைகள் திரைப்பட சங்கத்தினரால் அங்கீகரிக்கப்பட்ட திரைப்படங்கள் திரையிடப்படும்.
இதில், விலங்குகளிடத்தில் அன்பு செலுத்துதல், இயற்கையை பேணிப் பாதுகாத்தல், நட்புணர்வை வளர்த்தல், மாற்றுத் திறனாளிகளின் திறமையை வெளிப்படுத்துதல் குறித்த திரைப்படங்கள் பள்ளி மாணவர்களிடையே திரையிட்டுக் காண்பிக்கப்படும் என்றார்.