புதுவாழ்வுத் திட்டம் மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 4.29 கோடி தனிநபர் கடன் வழங்கப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா கூறினார்.
உத்தரமேரூர் ஒன்றியத்தில் புதுவாழ்வுத் திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களில் உள்ள பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில், அவர்களுக்கு தையல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் உத்தரமேரூர் ஒன்றியத்தில் உள்ள மானாம்பதி கண்டிகை கிராமத்தில் கிராமப்புற பெண்களுக்கு தையல் பயிற்சி வழங்கப்படுவதை மாவட்ட ஆட்சியர் சனிக்கிழமை பார்வையிட்டார். இங்கு 30 மகளிருக்கு தையல் பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சியானது வீரராகவன் கல்வியியல் அறக்கட்டளை மூலம் அளிக்கப்படுகிறது.
பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதுவாழ்வுத் திட்டத்தின் மூலம் 97,104 உறுப்பினர்களை உள்ளடக்கி 6,255 சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சுய உதவிக்குழு மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு இதுவரை ரூ. 163.11 கோடி கடன் இணைப்பு வழங்கப்பட்டது.
இத்திட்டம் செயல்படுத்தப்படும் ஊராட்சிகளில் 7,630 மாற்றுத் திறனாளிகள் கண்டறியப்பட்டு 674 சிறப்பு சுய உதவிக்
குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு ரூ. 4.29 கோடி தனிநபர் கடன் வழங்கப்பட்டுள்ளது. 1014 மாற்றுத் திறனாளிகளுக்கு பராமரிப்பு தொகை பெற்றுத்தரப்பட்டுள்ளது. மேலும், 1524 மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் பெற்றுத்தரப்பட்டுள்ளது என்றார்.
நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் சார் ஆட்சியர் அருண்தம்புராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயக்குமார், புதுவாழ்வுத் திட்ட அலுவலர் தனசேகரன் ஆகியோர் உடனிருந்தனர்.