வரதராஜபுரம் ஊராட்சிக்குள்பட்ட கிருஷ்ணாநகர் சாலையை ரூ. 36 லட்சத்தில் தார்ச் சாலையாக மாற்றுவதற்கான பூமி பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது
குன்றத்தூர் ஒன்றியம், வரதராஜபுரம் ஊராட்சிக்குள்பட்ட கிருஷ்ணா நகர் சாலை கடந்த பல வருடங்களாக மண் சாலையாகவே இருந்து வருகிறது.
இந்நிலையில் ஒரு கி.மீ. நீளமுள்ள இச்சாலையை ரூ. 36 லட்சத்தில் தார்ச் சாலையாக மாற்ற நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து தார்ச் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை கிருஷ்ணா நகர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், ஸ்ரீபெரும்புதூர் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பழனி, உத்தரமேரூர் முன்னாள் எம்எல்ஏ வாலாஜாபாத் பா.கணேசன் ஆகியோர் பங்கேற்று பூமி பூஜையை தொடங்கி வைத்தனர்.
இதேபோல் வரதராஜபுரம் ஊராட்சிக்குள்பட்ட அஷ்டலஷ்மி நகர் பகுதியில், தாய் திட்டத்தின் கீழ், ரூ. 20 லட்சத்தில் அம்மா பூங்கா, ரூ. 10 லட்சத்தில் அம்மா உடற்பயிற்சிக் கூடம் அமைப்பதற்கான பூமி பூஜையும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் ஒன்றியச் செயலாளர் எழிச்சூர் ராமசந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.