காஞ்சிபுரத்தை அடுத்த ஏனாத்தூரில் இயங்கி வரும் சங்கரா பல்கலைக்கழகத்தின் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை சார்பில் 15-ஆவது தேசிய தொழில்நுட்பக் கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.
கருத்தரங்கிற்கு, பல்கலைக்கழகத் துணைவேந்தர் விஷ்ணுபோத்தி தலைமை வகித்தார். பதிவாளர் ஸ்ரீனிவாசு வரவேற்றார். கல்லூரித் தலைவர் எ.ஸ்ரீராம் விளக்கவுரை ஆற்றினார். சிறப்பு அழைப்பாளராக டிவிஎஸ் லூகாஸ் நிறுவனத்தின் உதவி மேலாளர் ந.பத்ரிநாராயணன் கலந்து கொண்டு விழா மலரை வெளியிட்டு, பேசும்போது, மின்சாரம் மூலம் இயங்கக் கூடிய வாகனங்களின் சிறப்பு அம்சம் மற்றும் எதிர்காலத்தில் மின்சாரத்தால் மட்டுமே இயங்கக் கூடிய வாகனங்கள் மக்கள் பயன்பாட்டுக்கு வரக் கூடும் என்றார்.
இக்கருத்தரங்கில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களின் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தனர்.