செங்கல்பட்டை அடுத்த ஊரப்பாக்கத்தில் நாட்டு வெடிகுண்டுகளைப் பதுக்கி வைத்திருந்த 3 பேரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
செங்கல்பட்டை அடுத்த ஊரப்பாக்கம் செந்தில் ரயில் நகர் 6-ஆவது தெருவில் உள்ள ஒரு வீட்டில் மர்ம நபர்கள் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் தங்கியிருப்பதாக போலீஸாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனர்.
இதையடுத்து டிஎஸ்பி முகிலன், கூடுவாஞ்சேரி ஆய்வாளர் ரவிக்குமார் உள்ளிட்ட போலீஸார் அந்த வீட்டிற்குள் நுழைந்து சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்கு நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டு வந்தது தெரியவந்தது. போலீஸாரை கண்டதும் அங்கிருந்த சிலர் தப்பிச் செல்ல முயன்றனர். இதில், 3 பேரை போலீஸார் மடக்கிப் பிடித்தனர்.
விசாரணையில், ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த நரேஷ் (25), கனகராஜ் (24), ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த மதிவாணன் (26) என்பது தெரியவந்தது. இதில், மதிவாணன், ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சித் தலைவராக இருந்து பி.பி.ஜி.குமரன் கொலை வழங்கில் சம்பந்தப்பட்டவர் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து 3 பேரையும் போலீஸார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 4 கையெறிகுண்டுகள், வெடிமருத்து, வெடிகுண்டு தயாரிக்க வைத்திருந்த பொருள்கள், கத்தி, வீச்சரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களைப் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், தப்பி ஓடியவர்களையும் தேடி வருகின்றனர்.