மதுராந்தகத்தை அடுத்த வெள்ளபுத்தூர் காலனியில் சனிக்கிழமை ஏற்பட்ட மின்கசிவால் குடிசை வீடு தீப்பிடித்து எரிந்து சாம்பலானது.
வெள்ளபுத்தூர் காலனியைச் சேர்ந்தவர் பவளகொடி (32). கூலித் தொழிலாளி. இந்நிலையில், சனிக்கிழமை இவரது குடிசையில் எதிர்பாராதவகையில் மின்கசிவு ஏற்பட்டு தீப்பிடித்தது.
தகவலறிந்த மதுராந்தகம் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை அலுவலர் ராமதாஸ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில், குடிசையில் இருந்த தொலைக்காட்சிப் பெட்டி, துணிகள், தங்க நகை, குடும்ப அட்டை, பணம் உள்ளிட்ட அனைத்துப் பொருள்களும் எரிந்து சாம்பலாயின.
இதையடுத்து வருவாய் ஆய்வாளர் லட்சுமி நாராயணன், கிராம நிர்வாக அலுவலர் கார்த்திக் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து தீ விபத்தில் பாதிக்கப்பட்ட பவளகொடிக்கு நிவாரண உதவிகளை வழங்கினர்.