உத்தரமேரூரில் வியாபாரியிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
உத்தரமேரூர் பஜார் வீதியில் மருந்துக் கடை நடத்தி வருபவர் வேலாயுதம் (45). இவர், கடந்த 1-ஆம் தேதி இரவு, கடையில் இருந்து ரூ. 3.50 லட்சத்துடன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
மிஷன் பள்ளி தெரு அருகே வந்தபோது இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் 2 பேர், வேலாயுதம் வாகனத்தின் மீது மோதினர். பின்னர், அவரிடம் இருந்த ரூ. 3.50 லட்சத்தை பறித்துச் சென்றனர்.
இதுகுறித்து உத்தரமேரூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, மர்ம நபர்களைத் தேடி வந்தனர்.
இந்நிலையில், உத்தரமேரூர்-
மானாம்பதி சாலையில் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, நிற்காமல் சென்ற இரு சக்கர வாகனத்தை போலீஸார் விரட்டிச் சென்று பிடித்தனர்.
அதில் இருந்த 3 பேரை பிடித்து, பெருநகர் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரித்தனர்.
அதில், அவர்கள் எல்.எண்டத்தூர் பகுதியைச் சேர்ந்த சசிகுமார் (எ) சத்யா (25), குமார் (25), பாதிரி கிராமத்தைச் சேர்ந்த சுரேன் (27) என்பதும், இவர்கள் தான் வேலாயுதத்திடம் வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்த இரண்டு இரு சக்கர வாகனங்கள், ஒரு கார், ரூ. ஒரு லட்சம் ரொக்கம் மற்றும் மூன்றரை பவுன் நகை ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
பின்னர் 3 பேரையும் உத்தரமேரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் வைத்தனர்.