தத்தனூர் ஊராட்சியில் கண்ணந்தாங்கள் ஏரிக்கு வரும் முக்கிய நீர்வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் கடந்த நான்கு ஆண்டுகளாக மழைக்காலங்களில் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், தத்தனூர் ஊராட்சியில் உள்ள சிஎஸ்ஐ-தத்தனூர் கிராமத்தில் ஏசுநாதர் கோயில் நகர் பகுதி உள்ளது. இங்கு 350-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் கண்ணந்தாங்கள் சிற்றேரிக்குச் செல்லும் சுமார் 14 அடி அகலமுள்ள நீர்வரத்துக் கால்வாய் உள்ளது.
இந்நிலையில், இப்பகுதியின் அருகில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்று வீடுகளைக் கட்டி விற்பனை செய்து வருகிறது.
இந்நிறுவனம் கண்ணந்தாங்கள் சிற்றேரிக்குச் செல்லும் 14 அடி அகலமுள்ள கால்வாயை ஆக்கிரமித்ததோடு முறையான வடிகால்வால்வாய் அமைக்காமலும் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் வெளியேறும் வெள்ள நீர், வரத்து கால்வாயில் செல்லாமல் ஏசுநாதர் கோயில் நகர் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் தேங்கிவிடுகிறது. இதனால் கடந்த நான்கு ஆண்டுகளாக மழைக்காலங்களில் இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
இதுகுறித்து இப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், கடந்த சில வருடங்களாக எங்கள் குடியிருப்பு பகுதியின் அருகில் அரசு அங்கீகாரம் பெற்ற வீடுகள் கட்டி விற்பனை செய்துவரும் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் எங்கள் பகுதியில் இருந்து கண்ணந்தாங்கள் ஏரிக்கு செல்லும் நீர்வரத்துக் கால்வாயை தனியார் நிறுவனம் ஆக்கிரமித்து சாலை அமைத்துள்ளது. இதனால் கடந்த நான்கு ஆண்டுகளாக மழைநீர் வெளியேற முடியாமல் எங்கள் குடியிருப்புப் பகுதிகளிலேயே தேங்கி விடுகிறது. கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என தனியார் நிறுவனத்திடம் பல முறை தெரிவித்தும் அகற்றவில்லை. இதையடுத்து, மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோருக்கு பலமுறை கோரிக்கை மனு வழங்கியும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.