கின்னஸ் சாதனை முயற்சியாக காஞ்சிபுரத்தில் பெண் ஒருவர் 150 மணி நேரம் தொடர் யோகாசனம் செய்து வருகிறார்.
காஞ்சிபுரத்தில் மஹா மகரிஷி அறக்கட்டளை உள்ளது. இதில், பயிற்சி பெற்ற ரஞ்சனா யோகாசன ஆசிரியராகவும் உள்ளார்.
இவர், கடந்தாண்டு 57 மணிநேரம் தொடர் யோகாசனம் செய்து சாதனை புரிந்தார். இதனை முறியடிக்கும் வகையில், தற்போது கின்னஸ் சாதனை மேற்கொள்ள முயற்சித்துள்ளார். அதன்படி, தொடர்ந்து 150 மணி நேரம், அதாவது 6 நாள்களுக்கும் மேலாக யோகாசனம் செய்து காண்பிக்கவுள்ளார்.
இந்த நிகழ்ச்சி, சின்ன காஞ்சிபுரம் பங்காரு ஏசப்பன் தெருவில் உள்ள மஹாயோக தியான மைய வளாகத்தில் வியாழக்கிழமை தொடங்கியது. இந்த புதிய முயற்சியில், அவர் நூற்றுக்கணக்கான யோகாசனங்கள் செய்வதற்கு திட்டமிட்டு, சாதனை நிகழ்த்தப் போவதாகத் தெரிவித்துள்ளார்.
அவ்வகையில், தொடர்ந்து 150 மணி நேரம் யோகாசனம் செய்யும் பட்சத்தில் இந்தச் சாதனை உலக அளவிலான கின்னஸ் சாதனையாக அமையும் எனக் கூறப்படுகிறது. இதனை சிறுவர்கள், பெரியவர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் ஆர்வமுடன் நேரில் வந்து பார்த்தும், ரஞ்சனாவுக்கு வாழ்த்து தெரிவித்தும் வருகின்றனர்.