மகராஷ்டிர மாநிலம் ஷீரடியில் பகவான் சாயிபாபா முக்தியடைந்த நூற்றாண்டை கொண்டாடும் வகையில் அவர் அணிந்திருந்த பாதுகைகள் (காலணி) தாங்கிய ரதம் வெள்ளிக்கிழமை மாமல்லபுரம் கிழக்குக் கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி சென்றது.
பட்டிப்புலம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கிருஷ்ணன் காரணை சாயிபாபா கோயில் அருகில் ஷீரடி சாயிபாபா காலணிகள் தாங்கிய ரதம் வந்தது. இதனை ஏராளமான பக்தர்கள் வரவேற்றனர்.
இந்த பாதுகை ரதம் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் 2018 அக்டோபர் 18-ஆம் தேதி வரை ஒரு வருடத்துக்கு பக்தர்களின் தரிசனத்திற்காக இந்தியா முழுவதும் பல்வேறு நகரங்களில் உள்ள ஷீரடி சாயிபாபா கோயில்களுக்கு செல்கிறது.
இந்த ரதம் முதன்முதலாக தமிழகத்துக்கு வந்துள்ளது. புதன்கிழமை சென்னை மைலாப்பூர் ஷீரடி சாயிபாபா கோயில் அருகே பக்தர்கள் வழிபாட்டுக்கு பின்னர் கிழக்குக் கடற்கரை சாலை வழியாக புதுச்சேரிக்கு சென்றது. வழியில் மாமல்லபுரம் கிருஷ்ணன் காரணை பகுதியில் உள்ள ஷீரடி சாயிபாபா கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு அங்கு வழிபாடுகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் பாதுகைகளை தரிசித்தனர்.
இதனால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை மகாராஷ்டிர மாநில போலீஸாரும், மாமல்லபுரம் போலீஸாரும் ஒழுங்குபடுத்தினர்.