உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான மாமல்லபுரத்தில் மழைநீர் தேங்கிக் கிடப்பதால், சுற்றுலாப் பயணிகள் அவதிக்குள்ளாயினர்.
மாமல்லபுரத்தில் கடந்த 2 நாள்களாக இரவு நேரத்தில் பலத்த மழை பெய்தது. இதனால், சாலைகள், சுற்றுலா பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது.
ஆயுத பூஜை, விஜயதசமி, காந்தி ஜயந்தி என 4 நாள்கள் தொடர் விடுமுறை விடப்பட்டதால், மாமல்லபுரத்துக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகமாகக் காணப்பட்டது. இந்நிலையில், கடற்கரை கோயில், ஐந்து ரதம், வெண்ணெய் உருண்டைப் பாறை ஆகிய பகுதிகளில் மழைநீர் தேங்கியிருந்ததால், சுற்றுலாப் பயணிகள் சிரமத்துடன் சுற்றிப்பார்த்தனர்.
எனவே, மாமல்லபுரத்தில் தேங்கிக் கிடக்கும் மழைநீரை அகற்ற வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டில்: செங்கல்பட்டில் மழைநீரும், கழிவுநீரும் கலந்து சாலையில் தேங்கியுள்ளது. நகரில் உள்ள பெரும்பாலான தெருக்களில் குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளது. கழிவுநீர் கால்வாயும் தூர்ந்து போய் கிடக்கிறது.
இதனால், கொசுக்கள் உற்பத்தியாகி, நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மார்க்கெட் பகுதியில் கழிவு நீர் கால்வாயிலும், சாலைகளிலும் கொட்டப்படும் காய்கறி, பழங்கள், கீரை கழிவுகளால் சாலை சேறும் சகதியுமாக மாறியுள்ளது. மேலும், துர்நாற்றம் வீசுவதால் நடந்து செல்வோர் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர்.
எனவே, நகராட்சி நிர்வாகம் உடனடியாக கழிவுநீர் கால்வாயை தூர்வாரவும், குப்பைக் கழிவுகளை அகற்றி, கொசு மருந்து தெளிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.