செய்யூர், மதுராந்தகம் தொகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை ஆகியவற்றில் தொகுதி எம்எல்ஏக்கள் நேரில் ஆய்வு செய்தனர்.
பவுஞ்சூரில்...
செய்யூர் தொகுதிக்கு உள்பட்ட பவுஞ்சூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் எம்எல்ஏ மருத்துவர் ஆர்.டி. அரசு திங்கள்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
சுகாதார நிலையத்தில் புறநோயாளிகள் பிரிவு, பிரசவ வார்டு உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் பார்வையிட்ட அவர், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளை கேட்டறிந்தார்.
அவருடன் லத்தூர் ஒன்றிய திமுக செயலாளர் ராமசந்திரன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உடன் வந்திருந்தனர்.
மதுராந்தகத்தில்...
மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனையில் எம்எல்ஏ நெல்லிக்குப்பம் புகழேந்தி செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டார். அங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடம் அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.
போதிய படுக்கைகள் இல்லாததால் சில நோயாளிகள் தரையில் படுத்திருந்ததை கண்டவர், தலைமை மருத்துவ அதிகாரி ஆறுமுகத்திடம் அதுபற்றி கேட்டார். காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வரும் பெரும்பாலான நோயாளிகளுக்கு இங்கு சிகிச்சை அளிக்காமல் செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி விடுவதாக அங்கிருந்தோர் எம்எல்ஏ புகழேந்தியிடம் முறையிட்டனர்.
மதுராந்தகம் மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாததால் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரை செங்கல்பட்டுக்கு அனுப்புவதாகத் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது நகர திமுக செயலாளர் கே.குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.