திருட முயன்றவர் அடித்துக் கொலை

சுங்குவார்சத்திரம் அருகே ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியரின் வீட்டில் திருட வந்தவர் காவலாளியுடன் ஏற்பட்ட மோதலில் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

சுங்குவார்சத்திரம் அருகே ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியரின் வீட்டில் திருட வந்தவர் காவலாளியுடன் ஏற்பட்ட மோதலில் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
சுங்குவார்சத்திரத்தை அடுத்த பொடவூர் கிராமத்தில், சென்னையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர் உஷாபிரியனின் பண்ணை வீடு உள்ளது. இந்த பண்ணை வீட்டில் பொடவூர் கிராமத்தைச் சேர்ந்த சரவணன் தனது குடும்பத்தினருடன் காவலாளியாக பணியாற்றி வருகிறார். 
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு சரவணன் பொடவூர் கிராமத்தில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்று உணவருந்தி விட்டு, தனது மனைவி யமுனா, மகள் சவிதா ஆகியோருடன் பண்ணை வீட்டுக்கு திரும்பியுள்ளார். அப்போது பண்ணைவீட்டின் முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டு உள்ளே மர்ம நபர்கள் சிலர் இருக்கும் சப்தம் கேட்டுள்ளது. இதில் அதிர்ச்சியடைந்த சரவணன் மற்றும் அவரது மனைவி யமுனா ஆகிய இருவரும் கூச்சலிட்டுள்ளனர். 
இதனால் அதிர்ச்சியடைந்த கொள்ளையர்களில் ஒருவர் யமுனாவை பிரம்பால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. மற்றவர்கள் தப்பிச் சென்றுள்ளனர். அப்போது சரவணனுக்கும், மர்ம நபர் ஒருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில் சரவணன் தாக்கியதில் தலையில் பலத்த காயம் அடைந்த மர்ம நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சுங்குவார்சத்திரம் போலீஸார், இறந்தவரின் சடலத்தை மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்த சுங்குவார்சத்திரம் போலீஸார், இறந்தவர் யார், திருடுவதற்காக பண்ணை வீட்டுக்கு வந்தாரா அல்லது வேறு காரணமா என்பது குறித்து யமுனா மற்றும் சரவணனிடம் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தில் காயம் அடைந்த யமுனா ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் புறநோயாளியாக அனுமதிக்கப்பட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com