இந்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் காஞ்சிபுரம் பெரியார் நினைவுத் தூண் பகுதியில் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் மூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் பி.வி.சீனுவாசன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதில் தமிழக அரசின் நிர்வாக செயல்பாடுகளில் மத்திய அரசின் தலையீடு உள்ளது. மத்தியில் ஆளும் பாஜக, தான் விரும்பும் ஒரு அரசியல் சூழலை தமிழகத்தில் உருவாக்க முயற்சிக்கிறது. இதனை தமிழக அமைச்சர்கள் தட்டிக் கேட்கவில்லை. இதற்கு அவர்களின் லஞ்ச ஊழல் முறைகேடுகளே காரணம். இதனால், தமிழக அரசு பொதுமக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது. தமிழக அரசு உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் வேண்டுமென்றே காலம் தாழ்த்தி வருகிறது. எனவே, மக்களின் நம்பிக்கையை இழந்த எடப்பாடி அரசு பதவி விலக வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மாவட்டக் குழு உறுப்பினர் ஒய்.எம்.நாராயணசாமி நிறைவுரை ஆற்றினார். இதில், மாவட்ட நிர்வாகிகள் சுந்தரமூர்த்தி, ஜெகன்னாதன், கமலநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.