காஞ்சிபுரம் மாவட்டத்தில் செட்டாப்பாக்ஸ் நிறுவ ரூ. 200 மட்டும் தந்தால் போதும் என மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவன சந்தாதாரர்களுக்கு இலவச செட்டாப் பாக்ஸ்களை வழங்கியது. அதன்மூலம், சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள டிஜிட்டல் ஒளிபரப்பு சேவைக்கான தரம் உயர்த்தப்பட்ட, கட்டுப்பாட்டு அறையை திறந்து வைத்து, டிஜிட்டல் சேவைகளை வழங்கி வருகிறது.
இதில், முதல்கட்டமாக காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு 1,000 செட்டாப் பாக்ஸ்கள் பெறப்பட்டன. இதையடுத்து, உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் மூலம் சந்தாதாரர்களுக்கு செட்டாப் பாக்ஸ் வழங்கி, செயலாக்கம் செய்யப்பட்டு வருகின்றன. இதில், செட்டாப் பாக்ஸ்களை சந்தாதாரர்களுக்கு உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் இலவசமாக வழங்கவேண்டும்.
அதோடு, இந்த செட்டாப் பாக்ஸ்களை சந்தாதாரர்களின் இடத்தில் நிறுவி, செயலாக்கம் செய்வதற்கு ஒரு முறை மட்டும் (ஆக்டிவேஷன் கட்டணம்) ரூ. 200 பெற்றுக் கொள்வதற்கு கேபிள் ஆபரேட்டர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இலவச செட்டாப் பாக்ஸ் என்பதால், நிறுவுதல் மற்றும் செயலாக்கம் செய்வதற்கான தொகை ரூ. 200-க்கு மேல் சந்தாதாரர்கள் கூடுதல் தொகை ஏதும் செலுத்தத் தேவையில்லை.
எனவே, அனுமதிக்கப்பட்ட தொகையினை விட கூடுதலாக கேபிள் ஆபரேட்டர்கள் வசூலித்தால் 18004252911 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், 044-27230363 என்ற தொலைபேசி எண்ணிலும் பொதுமக்கள்தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.