முன்னாள் ஊராட்சித் தலைவரை கொலை செய்ய முயன்ற வழக்கு : நீதிமன்றத்தில் 4 பேர் சரண்
செங்கல்பட்டை அடுத்த ஊரப்பாக்கம் முன்னாள் ஊராட்சித் தலைவரை கொலை செய்ய முயற்சித்த வழக்கில் 4 பேர் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் புதன்கிழமை
சரணடைந்தனர்.
ஊரப்பாக்கம் முன்னாள் ஊராட்சித் தலைவர் சங்கர். இவரையும், இவரது தாயாரையும் கொலை செய்யும் நோக்கத்துடன் அவரது வீட்டுக்குள் கடந்த ஆகஸ்ட் மாதம் நுழைந்த மர்ம கும்பல், அவர்கள் இருவரையும் சரமாரியாகத் தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டனர்.
இதுகுறித்து சங்கர் அளித்த புகாரின் பேரில், கூடுவாஞ்சேரி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், முன்னாள் ஊராட்சித் தலைவர், அவரது தாயார் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தியதாக ஊரப்பாக்கத்தைச்சேர்ந்த கார்த்திக் என்கிற கார்த்தியேன் (29), மோகன் (28), நிவாஷ் (21), கிருபா என்கிற கிருபாகரன் (29) ஆகிய 4 பேரும் செங்கல்பட்டு மகளிர் கூடுதல் நீதிமன்றத்தில் புதன்கிழமை மாலை சரணடைந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி சுபாஷினி, சரணடைந்த நால்வரையும் 15 நாள் சிறையில் வைக்க உத்தரவிட்டதையடுத்து, அவர்கள் செங்கல்பட்டு மாவட்ட கிளை சிறைச் சாலையில் வைக்கப்பட்டனர்.