தற்கொலை செய்துகொண்ட ரெளடி ஸ்ரீதரின் சடலத்தை காஞ்சிபுரம் கொண்டு வருவதில் நடைமுறைச் சிக்கல் உள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கொலை, நில அபகரிப்பு, ஆள்கடத்தல் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தேடப்பட்டு வந்த காஞ்சிபுரம் ரெளடி ஸ்ரீதர் புதன்கிழமை இரவு கம்போடியா நாட்டில் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியானது.
இதையடுத்து, அவரது உடலை பார்க்க அவரது உறவினர்கள், வழக்குரைஞர் ஆகியோர் கம்போடியா சென்றுள்ளனர். இந்நிலையில், காஞ்சிபுரம், திருப்பருத்திக் குன்றத்தில் உள்ள அவரது வீட்டுக்கு போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதுபோல், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஸ்ரீதரின் கூட்டாளிகள் சிலரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்துள்ளனர். இருப்பினும், ஸ்ரீதர் தற்கொலை செய்து கொண்டதை உறுதிப்படுத்தி, போலீஸார் இதுவரை எந்தவொரு தகவலையும் வெளியிடவில்லை.
இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலக வட்டாரங்கள் கூறியதாவது: தேடப்பட்டு வந்த குற்றவாளி புதன்கிழமை இரவு கம்போடியாவில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, அவரது வழக்குரைஞர்கள் உள்ளிட்டோர் கம்போடியா நாட்டுக்குச் சென்றுள்ளனர். மேலும், ஸ்ரீதர் கம்போடியா நாட்டில் போலி கடவுச்சீட்டு மூலம் தங்கியிருந்து, தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதற்காக, அந்நாட்டு போலீஸாரின் நடவடிக்கை எந்தளவுக்கு இருக்கும் என்பது குறித்தும், கம்போடியா நாட்டின் சட்ட திட்டங்கள் உள்ளிட்டவை குறித்தும் ஆலோசிக்கப்பட வேண்டியுள்ளது. மேலும், ஸ்ரீதர் தற்கொலை செய்துகொண்டதை உறுதிசெய்து, மேலும் விரிவான தகவலை வெளியிடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம். அவ்வகையில், ஸ்ரீதரின் உடலைக் கொண்டு வருவது, பிரேத பரிசோதனை அறிக்கை உள்ளிட்ட அனைத்து தகவலும் கிடைப்பதற்கு மேலும் ஓரிரு நாள்கள் ஆகலாம் எனத் தெரிவித்தன.