ஆசிரியைக்கு கத்தி குத்து: முன்னாள் மாணவர் கைது

திருக்கழுகுன்றம் அருகே தனியார் பள்ளி ஆசிரியையை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓட முயன்ற முன்னாள் மாணவரை போலீஸார் கைது செய்தனர்.

திருக்கழுகுன்றம் அருகே தனியார் பள்ளி ஆசிரியையை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓட முயன்ற முன்னாள் மாணவரை போலீஸார் கைது செய்தனர்.
திருக்கழுகுன்றம் சோகண்டி கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் வல்லம் பகுதியைச் சேர்ந்த பூங்கொடி (27) ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், இவர் வழக்கம் போல வியாழக்கிழமை பள்ளியில் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது வகுப்பறைக்கு வந்த அதே பள்ளியில் படித்த மாணவர் ஒருவர் ஆசிரியை பூங்கொடியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பூங்கொடி முகத்தில் குத்திவிட்டு தப்பி ஓட முயன்றார். ஆசிரியையின் அலறல் சப்தம் கேட்டு வந்த மற்ற ஆசிரியர்கள் மாணவரைப் பிடித்தனர். தகவலறிந்து அங்கு வந்த திருக்கழுகுன்றம் போலீஸார் காயமடைந்த பூங்கொடியை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
பின்னர், அந்த மாணவரிடம் விசாரணை மேற்கொண்டனர். 
அதில், சிங்கப்பெருமாள் கோயில் பகுதியைச் சேர்ந்த இவர், கடந்த ஆண்டு இப்பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்துள்ளார். சரியாகப் படிக்காததால் பூங்கொடி அவரை அடித்ததாகவும், பள்ளி நிர்வாகத்திடம் கூறி மாற்றுச் சான்றிதழ் பெற்றுக் கொடுத்ததாகவும் தெரியவந்தது. பள்ளிப் படிப்பை தொடர முடியாத காரணத்தால் பூங்கொடியை கத்தியால் குத்தியதாக அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து திருக்கழுகுன்றம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சிறுவனை கைது செய்து, செங்கல்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com