அரசு குழந்தைகள் காப்பகங்கள், சேவை இல்லங்களில் பயின்ற பெண்களுக்கு இளநிலை இல்லக்காப்பாளர் காலிப் பணியிடங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இப்பணியிடங்களுக்கு வரும் அக்டோபர் 10 -ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அரசு குழந்தைகள் காப்பகங்கள், சேவை இல்லங்களில் இளநிலை இல்லக் காப்பாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அதன்படி, தாம்பரம், கடலூர், தஞ்சாவூர், சேலம், மதுரை, சிவகங்கை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் உள்ள சேவை இல்லத்தில் பயின்ற முன்னாள் மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
முன்னாள் சேவை இல்ல மாணவிகள் தகுதியின் அடிப்படையில், நிபந்தனைகளுக்குள்பட்டு வரும் அக்டோபர் 10 -ஆம் தேதிக்குள் மாவட்ட சமூக நல அலுவலகம், எண். 43, காந்திநகர் 2-ஆவது தெரு, ஐஓபி வங்கி அருகில், செவிலிமேடு , காஞ்சிபுரம் எனும் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
நிபந்தனைகள்: அரசுசேவை இல்லங்களில் உள்ளுறைவோராக தங்கிப் பயின்ற முன்னாள் மாணவியாக இருக்கவேண்டும். பள்ளி இறுதி வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, அதன் அட்டையை கைவசம் வைத்திருக்க வேண்டும். வயது வரம்பு 25 முதல் 35 வயது வரை இருக்க வேண்டும். ஆதரவற்றோர், விதவைகள், கணவனால் கைவிடப்பட்டவர்களுக்கு 25 வயது முதல் 40 வயது வரை இருக்க வேண்டும்.
படிவ விவரம்: பெயர், பிறந்த தேதி, கல்வித் தகுதி, இனம், சேவை இல்லத்தில் கல்வி பயின்ற வகுப்பு மற்றும் ஆண்டு, விடுவிக்கப்பட்ட நாள், ஆதரவற்றவர்-கணவனால் கைவிடப்பட்டவர்-விதவை சான்றிதழ் அவசியம், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த நாள், அட்டை எண், நாள் மற்றும் புதுப்பித்த நாள், எந்த மாவட்டத்திலும் பணி செய்ய விருப்பம் ( உண்டு அல்லது இல்லை), முன் அனுபவம் குறித்த விவரம் விண்ணப்ப படிவத்தில் இருத்தல் அவசியம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.