மதுராந்தகம் காந்தி நகரில் மர்மக் காய்ச்சலால் மேலும் 2 பேர் திங்கள்கிழமை உயிரிழந்தனர்.
மதுராந்தகம் நகராட்சி 20-ஆவது வார்டு காந்தி நகரில் வசிப்பவர் செல்வகுமார். இவரது மகன் விஷ்ணு (3), கடந்த சில நாள்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து சனிக்கிழமை மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட விஷ்ணு திங்கள்கிழமை காலை இறந்தார்.
அதே பகுதியைச் சேர்ந்த தொழிலாளி அன்புரோஸும் (50) மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அங்கு திங்கள்கிழமை இறந்தார்.
எம்எல்ஏ ஆறுதல்: தகவல் அறிந்த மதுராந்தகம் தொகுதி எம்எல்ஏ நெல்லிக்குப்பம் புகழேந்தி, இறந்க விஷ்ணுவின் வீட்டுக்குச் சென்று அஞ்சலி செலுத்தி, அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். அவருடன் நகர திமுக செயலாளர் கே.குமார் உள்பட பலர் சென்றனர். இப்பகுதியில் கடந்த 15 நாள்களுக்குள் மர்மக் காய்ச்சலுக்கு விஷ்ணு, சந்திரசேகர், சஞ்சய், அன்புரோஸ் ஆகிய 4 பேர் பலியானதால் காந்தி நகர் வாசிகள் அச்சமடைந்துள்ளனர்.