மாதவரம் அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதிய விபத்தில் ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் உயிரிழந்தார்.
சென்னை கொளத்தூர் அம்பேத்கர் நகர் 2-ஆவது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் முருகன் (60). ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளரான இவர் புதன்கிழமை காலை, இருசக்கர வாகனத்தில் கொளத்தூரில் இருந்து ஆவடி நோக்கி சென்று கொண்டிருந்தார்.
புழல் புத்தாகரம் அணுகுச் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது கல்லூரி மாணவிகளை ஏற்றி வந்த வேன் ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து மாதவரம் போக்குவரத்துப் புலனாய்வு பிரிவு ஆய்வாளர் சித்ரா, உதவி ஆய்வாளர் ஜெகன்நாதன் ஆகியோர் அங்கு வந்து சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இதுகுறித்து வழக்குப்பதிந்து, வேன் ஓட்டுநர் பெரம்பூர் குமரேசனை (25) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.