தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 15, 16, 17 ஆகிய 3 நாள்களுக்கு கிளாம்பாக்கத்தில் தாற்காலிகப் பேருந்து நிலையம் செயல்பட உள்ளது.
இதுகுறித்து விவரம்:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு எளிதாக செல்லும் வகையில், அக்டோபர் 15, 16, 17 ஆகிய 3 நாள்களுக்கு தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, மேற்கண்ட நாள்களில் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து அனைத்து இருக்கைகளும் நிரம்பிய பேருந்துகள் தாம்பரம், பெருங்களத்தூர் செல்லாது.
மாறாக, மதுரவாயல், பூவிருந்தவல்லி, நசரத்பேட்டை வெளிச்சுற்றுச் சாலை வழியாக வண்டலூர் செல்லும்.
எனவே, தாம்பரம், பெருங்களத்தூரிலிருந்து பயணம் செய்ய முன்பதிவு செய்த பயணிகள் தாம்பரம், பெருங்களத்தூர் பேருந்து நிலையங்களில் ஏறத் தேவையில்லை.
அதற்கு பதிலாக, மூன்று நாள்களுக்கு மட்டும் புதியதாக கிளாம்பாக்கத்தில் சிஎம்டிஏ கட்டவுள்ள புதிய பேருந்து நிலைய வளாகத்தை தாற்காலிகப் பேருந்து நிறுத்தமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
எனவே, பொதுமக்கள், வாகன ஓட்டிகள் இந்தப் போக்குவரத்து மாற்றங்களுக்கு ஏற்ப பயணத்தை அமைத்துக் கொள்ளுமாறு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.