செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. டெங்கு கொசுக்களைக் கட்டுப்படுத்த மருத்துவமனைகள், சுகாதார நிலையங்கள், பள்ளிகள், தனியார் நிறுவனங்களில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தமிழக சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை திடீரென ஆய்வு செய்தார். காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அவர், அங்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள், மருந்துகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். அப்போது மருத்துவமனை முதல்வர் உஷா சதாசிவம், மருத்துவக் கண்காணிப்பாளர் பூபதி, நிலைய மருத்துவ அலுவலர் வள்ளியரசி, உதவி நிலைய மருத்துவ அலுவலர் தீனதயாளன் உள்ளிட்ட மருத்துவர்கள் உடனிருந்தனர்.