மதுராந்தகம் அருகே தங்க மோதிரம், செல்லிடப்பேசிக்காக முதியவர் ஒருவர் திங்கள்கிழமை நள்ளிரவு மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். புத்திரன்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (70). ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவர் ஆடுகளை விற்று ரூ. 25 ஆயிரத்தை தனது மகன் கண்ணனிடம் கொடுத்துள்ளார்.
திங்கள்கிழமை வழக்கம்போல மகன் வீட்டுக்கு எதிரே படுத்து தூங்கியுள்ளார். நள்ளிரவு அங்கு வந்த மர்ம நபர்கள் அவர் அணிந்திருந்த 2 தங்க மோதிரங்களையும், செல்லிடப்பேசி ஆகியவற்றை திருடியுள்ளனர். அவர்கள் தாக்கியதில் கழுத்திலும், தலையிலும் பலத்த காயமடைந்த ராஜமாணிக்கம் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இந்த கொலை சம்பவம் குறித்து செவ்வாய்க்கிழமை சூனாம்பேடு காவல் நிலையத்தில் அவரது மகன் கண்ணன் அளித்த புகாரின்பேரில் ஆய்வாளர் ரவி குமார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். சம்பவ இடத்தை மதுராந்தகம் டி.எஸ்.பி. ராஜேந்திரன் நேரில் பார்வையிட்டார்.