மீனவ சமூகத்தைச் சார்ந்த பட்டதாரி இளைஞர்கள் குடிமைப்பணி போட்டித் தேர்வுக்கு ஆயத்தமாவதற்கான சிறப்பு பயிற்சிக்கு அக்டோபர் 25-ஆம் தேதி (புதன்கிழமை) விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மீன்வளத் துறை அமைச்சர் சட்டப்பேரவையில் கடந்த ஜூலை 11-ஆம் தேதி அறிவித்ததற்கு ஏற்ப, மீன்வளத் துறை மற்றும் அண்ணா மேலாண்மைப் பயிற்சி நிலையம் சார்பில் ஆண்டுதோறும், 20 பட்டதாரிகளுக்கு குடிமைப்பணி போட்டித் தேர்வுக்கான சிறப்பு பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
இந்த புதிய திட்டத்தை செயல்படுத்த அரசு ஆணை வழங்கியுள்ளது. அதன்படி, கடல், உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள், மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் குழந்தைகள் இந்தப் பயிற்சியில் சேர்ந்து பயன்பெறலாம். இதில், பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்பப் படிவம், அரசு வழிகாட்டுதல்களை www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து கட்டணமின்றி இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதுபோல், மண்டல மீன்துறை இணை இயக்குநர்கள், மாவட்ட மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகங்களில் வேலை நாள்களில் விலையின்றி பெற்றுக் கொள்ளலாம். அதன்படி, விண்ணப்பதாரர் மீன்துறை இணைய தளத்தில் உள்ள வழிகாட்டுதலின் படி பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகத்துக்கு பதிவு அஞ்சல் மூலம் அல்லது நேரடியாக புதன்கிழமை மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் கூடுதல் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட மீன்துறை உதவி, துணை, இணை இயக்குநர்களின் அலுவலகங்களை நேரில் தொடர்பு கொள்ளலாம் என மீன்வளத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.