காஞ்சிபுரத்தை அடுத்த வாலாஜாபாத் பகுதியில் டெங்கு கொசுப்புழு உற்பத்திக்கு காரணமானவர்களுக்கு மீது ரூ. 65 ஆயிரம் அபராதம் விதித்து ஆட்சியர் புதன்கிழமை நடவடிக்கை மேற்கொண்டார்.
காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, விழிப்புணர்வு ஏற்படுத்துவது மற்றும் டெங்கு கொசுப்புழு உற்பத்திக்கு காரணமாக இருப்பவர்கள் மீது அபராதம் விதிப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, வாலாஜாபாத் சாலையில் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா புதன்கிழமை நேரடி ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தியாகும் விதமாக இருந்த தனியார் உணவகத்துக்கு ரூ. 25 ஆயிரம், புதிதாக கட்டப்பட்டு வந்த கட்டடத்துக்கு ரூ. 25 ஆயிரம், தனியார் திருமண மண்டபத்துக்கு ரூ. 10 ஆயிரம், சிமென்ட் கடை ஒன்றுக்கு ரூ. 5 ஆயிரம் என மொத்தம் ரூ. 65 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தார்.