காஞ்சிபுரம் அருகே பேருந்து மீது இரு சக்கர வாகனம் மோதியதில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் இருவர் புதன்கிழமை உயிரிழந்தனர்.
ஈரோடு மாவட்டம், பள்ளிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த விசுவநாதனின் மகன் நிதின் கார்த்திக் (20), சென்னை, சிட்லப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சஞ்சீவனின் மகன் பிரீதம் (20). இருவரும் ஏனாத்தூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு மருத்துவம் பயின்று வந்தனர்.
இந்நிலையில், இருவரும் பொன்னேரிக்கரையில் இருந்து கல்லூரிக்கு புதன்கிழமை இரு சக்கர வாகனத்தில் சென்றனர்.
காரப்பேட்டை அருகே சென்றபோது, அங்கு நின்றிருந்த தனியார் நிறுவனத்தின் பேருந்து மீது இவர்கள் சென்ற இரு சக்கர வாகனம் மோதியது. இதில், இருவரும் பலத்த காயமடைந்தனர்.
இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு, அவர்கள் படிக்கும் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், அவர்கள் இருவரும் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
இதையடுத்து, மருத்துவமனைக்கு வந்த காஞ்சிபுரம் கிராமிய போலீஸார், சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.