கூடலூர் ஊராட்சி, மறைமலை நகர் பகுதியில் புதிதாக மேலும் 3 டாஸ்மாக் கடைகளைத் திறப்பதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையாவிடம் மனு அளித்தனர்.
மனுவில் கூறியிருப்பதாவது: செங்கல்பட்டு வட்டம், கூடலூர் ஊராட்சிப் பகுதி மறைமலை நகர் அண்ணா சாலையில் அண்மையில் 400 மீட்டருக்குள் 3 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.
இந்நிலையில் இவற்றின் கிழக்குப் பகுதியில் 50 மீட்டருக்குள் மேலும் 3 டாஸ்மாக் கடைகளைத் திறப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதன்படி, ஒரு கிலோ மீட்டருக்கு உள்ளாக 6 டாஸ்மாக் கடைகள் உருவாகி விடும். இந்த டாஸ்மாக் கடைகள் உள்ளவை முற்றிலும் கிராமப் பகுதியாகும். கூடலூர் கிராமப் பகுதியையொட்டி கடம்பூர், கலிவந்தப்பட்டு, கரும்பூர், கோகுலாபுரம், கோவிந்தாபுரம், மட்டான் ஓடை உள்ளிட்ட குக்கிராமங்களில் கூலித் தொழிலாளர்களே அதிகம்.
இவர்களின் ஒருநாள் வருவாய் ரூ. 300 முதல் 400 ஆகும். அதுபோல், இப்பகுதியில் நடுநிலைப்பள்ளி உள்ளது.
மேலும், மாணவர்கள், பெண்கள் உள்ளிட்டோர் இந்த 6 கடைகளை கடந்துதான் சென்றாக வேண்டும்.
இதனால், பாதுகாப்பு இல்லை. குற்றச் செயல்கள் நடப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. கிராம வளர்ச்சியும் பாதிக்கும். நாளுக்கு நாள் இளைஞர்கள் குடிப் பழக்கத்துக்கு ஆளாகி வருவது அதிர்ச்சியளிக்கிறது. எனவே கிராமப்புறப் பகுதிகளை மையப்படுத்தி, டாஸ்மாக் கடைகளை அமைப்பதை அரசு கைவிட வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளனர்.